Published : 29 Dec 2021 10:03 AM
Last Updated : 29 Dec 2021 10:03 AM

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி அவசியம்: முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஒமைக்ரான் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் முகக் கவசம் அணிதலையும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தலையும் ஆங்காங்கே மக்கள் கூடுவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இது கவலை அளிக்கிறது.

ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதில் முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய மூன்றும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இந்த மூன்றில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியன கடைபிடிக்கப்படுவதாக தெரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெசன்ட் நகர் கடற்கரையிலும், தி.நகர் ரங்கநாதன் தெருவிலும், காசிமேட்டிலும் குவிந்துள்ள கூட்டத்தின் புகைப்படங்களைப் பார்க்கும்போது பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை என்பது தெரிகிறது. அணிந்தவர்களும் அரைகுறையாக அணிந்துள்ளனர். சமூக இடைவெளி என்பது முற்றிலுமாக காற்றில் பறக்கவிடப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாகத் தான் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 6வது இடத்திற்கு வந்துவிட்டது. ஒமைக்ரானை கட்டுப்படுத்துவதற்காக மத்திய பன்னோக்கு குழுவும் தமிழ்நாடு வந்தடைந்து ஆய்வினை தொடங்கி உள்ளது.

ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள ஏதுவாக மருத்துவக் கட்டமைப்புகளையும் வசதிகளையும் பார்வையிட்டு இருப்பதாகவும் தற்போதைய நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், மேலும் கூடுதலாக 50,000 படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

வந்தபின் காப்பதற்குப் பதிலாக வருமுன் காக்கும் வகையில் முகக்கவசம் அணிவதை 100% கண்டிப்புடன் அமல்படுத்துவதிலும், சமூக இடைவெளி கடைபிடித்தலை கடுமையாக செயல்படுத்துவதிலும், அரசு தீவிரம் காட்ட வேண்டும். இது குறித்து ஏற்கெனவே முதல்வருக்கு நான் அறிவுறுத்தியிருந்தேன். ஆனால் அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

ஒமைக்ரானை வீழ்த்த ஒரே வழி நாம் அனைவரும் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இதை உலக சுகாதார அமைப்பின் அறிவியல் அதிகாரி வலியுறுத்தியதோடு ஒமைக்ரான் தொற்று பரவும் ஆபத்தான இடங்களைக் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒமைக்ரான் தொற்று மக்கள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் வேகமாகப் பரவுவதால் ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை அரசு மக்களிடம் எடுத்துச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டோர், செலுத்தாதோர் என அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் அலுவலகக்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் நூறு விழுக்காடு முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளி கடைபிடித்தலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் புத்தாண்டை முன்னிட்டு ஆங்காங்கே மக்கள் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மருத்துவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, ஒமைக்ரான் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் முதல்வர் முகக் கவசம் அணிதலையும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தலையும் ஆங்காங்கே மக்கள் கூடுவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x