Last Updated : 29 Dec, 2021 05:32 AM

 

Published : 29 Dec 2021 05:32 AM
Last Updated : 29 Dec 2021 05:32 AM

காவலர்கள் நலனில் கவனம் செலுத்தும் டிஜிபி சைலேந்திரபாபு; கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை; பலருக்கு மீண்டும் பணி: லஞ்சம் பெறப்படுவதைத் தடுக்க உத்தரவுகள் வாட்ஸ்அப்-பில் அனுப்பிவைப்பு

சென்னை

தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். இதற்கு காவலர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதைப்பரிசீலித்த டிஜிபி சைலேந்திரபாபு,ஓய்வு அளிக்கும் திட்டத்தை அண்மையில் நடைமுறைப்படுத்தினார்.

இதுதவிர, காவல் துறையில் குறைதீர்ப்பு முகாம்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சரக காவல் துணைத்தலைவர், மண்டலகாவல்துறை தலைவர் என 3 நிலைகளில் நடத்தப்பட்டன.

இதில் குறிப்பாக, டிஜிபி அலுவலகத்தில் கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை பெறப்பட்ட 1,340 மனுக்களில் 1,058 கருணை மனுக்களாகும். இந்த மனுக்களின் அடிப்படையில் 366 காவலர்களின் தண்டனைரத்து செய்யப்பட்டது. 164 காவலர்களின் தண்டனை குறைக்கப்பட்டது. 51 காவலர்கள் பணிக்கு திரும்ப எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் பெண் காவலர்கள்.

இந்த பெண் காவலர்களில் பலர், கர்ப்பிணிகளாக இருந்தபோது பணியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் மற்றும் தொடர்விடுப்பு எடுத்ததால் துறைரீதியில்நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களாவர்.இதுதவிர, 1,353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின்படி சொந்தமாவட்டங்களுக்கு பணி இடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல்,போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு முடிவு செய்தார். அதன்படி, அவர்களில், வேலை தேடுவோர், வேலைக்குத் தயாராக இருப்பவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டது. கல்வித் தகுதி, சிறப்புத் தகுதி, எதிர்பார்ப்பு போன்ற விபரங்கள் தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, டிச.22, 23-ம்தேதிகளில் ‘காவல் குடும்ப வேலைவாய்ப்பு முகாம்’ சென்னை, மதுரை,திருச்சி, கோவை, வேலூரில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், தனியார் வங்கிகள், நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டன. இதில், 274 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றன. 1,046 பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

லஞ்ச குற்றச்சாட்டுகள்

இது ஒருபுறம் இருக்க, பணி இடமாறுதல், தண்டனை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக டிஜிபி உத்தரவிட்ட பின்னரும், அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்குவதில் சிலர் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு கையெழுத்து போட்ட அடுத்த நிமிடமே, அந்தத்தகவல் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு தற்போது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவதோடு, இடையில் இருப்பவர்கள் லஞ்சம் பெறுவதும் தடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

டிஜிபி சைலேந்திரபாபுவின் இதுபோன்ற அதிரடியான பலசெயல்பாடுகள் மகிழ்ச்சி அளிப்பதாக போலீஸார் தெரிவித்துள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x