Published : 29 Dec 2021 07:12 AM
Last Updated : 29 Dec 2021 07:12 AM
சென்னை அம்பத்தூரில் செம்மரக்கட்டைகள் கடத்திச் சென்ற காரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
அம்பத்தூர் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் போலீஸார் நேற்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அம்பத்தூர் தொழிற்பேட்டை சி.டி.எச். சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில், அதிவேகமாகச் சென்ற காரை போலீஸார் பார்த்தனர். உடனடியாக அந்தக் காரை விரட்டிச் சென்ற போலீஸார், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐ.டி.ஐ. அருகே மடக்கிப் பிடித்தனர்.
காரை ஓட்டிச் சென்றவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அவர் போலீஸாரை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர், போலீஸார் காரை சோதனை செய்தபோது, செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காரையும், செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
1.5 டன் பறிமுதல்
பின்னர், சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் மல்லிகா தலைமையிலான போலீஸார் காரை ஆய்வு செய்தபோது, ஒன்றரை டன் எடையுள்ள, 18 துண்டு செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், அவற்றைக் கடத்திச் சென்றது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய ஓட்டுநர் உரிமத்தில் இருந்த முகவரி, சென்னை புது வண்ணாரப்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்த சையது சாதிக் (25) என்பது தெரியவந்தது. செம்மரக்கட்டைகளை கடத்திய காரின் பதிவு எண்ணைக் கொண்டு, இதில் சம்பந்தப்பட்டவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT