Last Updated : 28 Dec, 2021 06:54 PM

 

Published : 28 Dec 2021 06:54 PM
Last Updated : 28 Dec 2021 06:54 PM

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை: தலைமைச் செயலரை நேரடியாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தலைமைச் செயலரை முற்றுகையிட்ட அமைச்சக பணியாளர் சங்கத்தினர், செயலரை நேரடியாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதல் தளத்தில் உள்ள தலைமைச் செயலர் அறைக்கு தலைமைச் செயலர் அஸ்வினிக்குமார் இன்று வந்தார். அதைத்தொடர்ந்து அவர் அறை முன்பு புதுச்சேரி அமைச்சக பணியாளர் சங்கத்தினர் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு தலைமை வகித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில்,

"புதுவை மக்களுக்கான விரைவான திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என அரசு முனைப்புடன் உள்ளது. ஆனால், அதனை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரிகள் இல்லை. இதனிடையே, காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் அனைத்து துறைகளிலும் பதவி உயர்வுகளை வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தினார். அதற்கான பணிகளை முதல்வர் தொடங்கிய நிலையில் அதனை செயல்படுத்த தலைமைச் செயலர் அஸ்வினிக்குமார் விரும்பவில்லை. வேண்டுமென்று விதிகளுக்கு புறம்பாக பதவி உயர்வினை செயல்படுத்தாமலும், புதிய வேலைவாய்ப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதனால் படித்த இளைஞர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். தலைமைச்செயலர் விதிகளுக்கு மாறாக குறைவான ஊதியத்துக்கு உயர் பதவிகளில் நியமிக்கும் வழிமுறைகளை கையாள்கிறார். இது சட்டத்துக்கு புறம்பானது. பலமுறை கோரிக்கை வைத்தும் தலைமைச்செயலர் கண்டுக்கொள்ளாததால் முதல்முறையாக இப்போராட்டத்தில் ஈடுபட்டோம்" என் ராஜேந்திரன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோரை தலைமைச்செயலர் அஸ்வினி குமார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பணியிடம் நிரப்பாமல் இளைஞர்களை வஞ்சிப்பதாக நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டோர் சரமாரியாக குற்றம் சாட்டிய போது செயலரால் உரிய விளக்கம் தரப்படவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கெனவே முதல்வர், ஆளுநர் ஆகியோரிடம் தலைமைச் செயலர் பற்றி புகார் தந்துள்ள நிலையில், தலைமைச் செயலரை உடனடியாக பணியிட மாற்றம் செய்வதுடன், விதிகளை மீறி செயல்படுவதால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x