Published : 28 Dec 2021 11:31 AM
Last Updated : 28 Dec 2021 11:31 AM

ஒமைக்ரான் அச்சுறுத்தல்; இரவு நேர ஊரடங்கை விரைந்து அமல்படுத்துக: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை: நாடு முழுவதும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் நிலவி வருவதால் காலம் தாழ்த்தாமல் இரவு நேர ஊரடங்கை விரைந்து அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவனத் தலைவர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக அதிகரித்து வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

அதிகபட்சமாக டெல்லியில் 142, மகாராஷ்டிராவில் 141, கேரளாவில் 57 மற்றும் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஒமைக்ரான் பரவல் வேகமாகப் பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு, கரோனா கட்டுப்பாடுகள் எனத் தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்பட்டால் மாநில அரசுகள் அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, டெல்லி, கர்நாடகா, அசாம், உத்தரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களை ஒமைக்ரான் வகை கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரக் குழு தமிழகம் வருகை தந்து ஒமைக்ரான் தொற்று குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தலைநகர் சென்னையில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது சென்னை வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்கள் பண்டிகை நாட்களாக இருப்பதால் மக்கள் அதிக அளவு பொது இடங்களில் கூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் கரோனா தொற்று தமிழகத்தில் மீண்டும் உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் டெல்லி உள்பட பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ள நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று முஸ்தபா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x