

சென்னையில் காற்று மாசு அளவை கண்காணிக்க, ரூ.1 கோடியே 25 லட்சத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய வாகனச் சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரின் சுற்றுப்புற காற்று மாசு அளவை தொடர்ந்து கண்காணிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சத்தில் நட மாடும் தொடர் சுற்றுப்புற மாசு கண்காணிக்கும் நிலைய வாகனச் சேவையை தலைமைச் செயலகத் தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் மூலம் சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள சல்பர் டை ஆக்சைடு,நைட்ரஜன் ஆக்கசைடு, அமோனியா, ஒசோன், கார்பன் மோனாக்சைடு, பென்சீன் போன்ற வாயுக்களின் அளவு மற்றும் காற்றில் கலந்துள்ள 10 மைக்ரான் மற்றும் 2.5 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள நுண் துகள்களையும் கண்டறியலாம். வானிலை தொடர்பான விவரங் களை அறியும் வானிலை கண்காணிப்பு கருவிகளும் இந்த வாகனத்தில் இருக்கும்.மேலும், சென்னை மாநகரின் குறிப்பிட்ட இடங்களில், காற்று மாசு அளவை தொடர்ச்சியாகவும், தீபாவளி, போகி போன்ற பண்டிகை நாட்களில் காற்றின் தன்மையை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், விபத்துக்கள், புகார்கள், நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றுக்கு அந்தந்த குறிப் பிட்ட இடத்திலேயே காற்றின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும் வகையிலும் இந்த வாகனம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் குறித்த புகார்கள், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு குறித்த புகார்களையும் பொதுமக்கள் இணைய வழி மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்கலாம். அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு இணையதளம் மூலம் தகவல் அனுப்பும் வகையில் ரூ.10 லட்சம் செலவில் மென் பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தொழிற்சாலைகள், தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அனுமதியைப் பெறும் விண்ணப்பங்களை இணையம் வாயிலாக சமர்ப்பித்து, அனுமதியையும் இணையம் மூலமாக வழங்க ஏதுவாக ரூ.5 லட்சம் செலவில் மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இது தவிர, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சென்னை, மதுரை, சேலம், கோவை மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இயங்கும் 5 மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களுக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது. இந்த சான்றிதழை முதல்வர் ஜெயலலிதாவிடம், அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் காட்டி வாழ்த்து பெற்றார். இதன் மூலம் நாட்டிலேயே தேசிய தரச்சான்று பெற்ற 5 ஆய்வகங் களை கொண்ட ஒரே வாரியம் என்ற சிறப்பை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் மற்றும் துறையின் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கே.ஸ்கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அரசு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.