Published : 27 Dec 2021 06:29 AM
Last Updated : 27 Dec 2021 06:29 AM

தமிழகம் முழுவதும் நடந்த 16-வது கட்ட மெகா முகாமில் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த 16-வது கட்ட மெகா முகாமில் 17.31 லட்சம்பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. புதிதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று உலகைஅச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாரம்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் இதுவரைமுதல் தவணை 85 சதவீதம் பேருக்கும், இரண்டு தவணை 56 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 16-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்றுதமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம் நடந்தது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டி மடுவன்கரையில் நடந்த முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த 16-வது கட்ட மெகா முகாமில் 17 லட்சத்து 31,277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி முகாம் பணியில்ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது.

புதிதாக 610 பேருக்கு தொற்று

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 354, பெண்கள் 256 என மொத்தம் 610 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 679 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 6,629 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 10 பேர் உயிரிழந்தனர்.

குறிப்பாக, ஒமைக்ரான் பாதிப்புசென்னையில் 25, மதுரை 4, செங்கல்பட்டு 2, திருவண்ணாமலை 2, சேலம் 1 என மொத்தம் 34 ஆக உள்ளது. அதில், 12 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 22பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்என்று சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x