Published : 27 Dec 2021 06:43 AM
Last Updated : 27 Dec 2021 06:43 AM
சென்னை: காட்பாடி அருகே உள்ள ரயில்வேபாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இன்று முதல் வழக்கம்போல இத்தடத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரக்கோணம் - காட்பாடி தடத்தில் திருவலம் - முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே பாலத்தில் விரிசல்இருப்பது கடந்த 23-ம் தேதி கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கடந்த 3 நாட்களாக பெங்களூரு, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு இடங்களுக்கு இந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய 70-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், பாலத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 3 நாட்களாக முழு வீச்சில்நடந்த சீரமைப்பு பணி நேற்று மாலை நிறைவடைந்தது. அதன் பிறகு, ரயில் இன்ஜினை இயக்கி ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் இத்தடத்தில் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுபற்றி கேட்டபோது, தெற்குரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
27-ம் தேதி முதல் இத்தடத்தில் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும். இதுவரை ரத்து செய்யப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களுக்கான கட்டணத் தொகை எந்த பிடித்தமும் இன்றி பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்படும்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்களின் வங்கிகணக்குக்கு கட்டண தொகை அடுத்த சில நாட்களில் வந்துவிடும். மையங்களில் முன்பதிவு செய்தவர்கள் அருகே உள்ளமையங்களில் டிக்கெட்டை காண்பித்து கட்டணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT