Published : 27 Dec 2021 08:53 AM
Last Updated : 27 Dec 2021 08:53 AM
ராமநாதபுரம்: இலங்கை அரசு சிறைபிடித்துள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் 68 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் டிச.18, 19 ஆகிய தேதிகளில் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மண்டபம், பாம்பனில் வாபஸ்
இதைக் கண்டித்தும், மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் டிச.20-ம் தேதி முதல் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மண்டபம் மீனவர்கள் நேற்று முன்தினமும், பாம்பன் மீனவர்கள் நேற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று மீன்பிடிக்கச் சென்றனர்.
ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்றது. மீனவர் சங்க துணைத் தலைவர் எமரிட் தலைமை வகித்தார்.
ரயில் மறியல்
மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ், சகாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 68 தமிழக மீனவர்கள், 10 விசைப்படகுகளை இலங்கை அரசு விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்.
ஜன.1-ம் தேதி மாலை தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க மீனவர் குழுவை அழைத்துச் செல்வதாக தமிழக மீன்வளத் துறைஅதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அமைச்சரை சந்தித்த பின்பு அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT