Published : 27 Dec 2021 08:19 AM
Last Updated : 27 Dec 2021 08:19 AM
சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில், ரூ.120 கோடியில் வடிகால்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த காலங்களில் பெய்த கனமழையின்போது மழைநீர் தேங்கிய இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு அமைக்க வேண்டிய மழைநீர் வடிகால்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வல்லுநர்கள், பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
திட்ட அறிக்கை
அதன்படி, மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த வடிகால்களை சீரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, அதுகுறித்த விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் 45 கி.மீ. நீளத்துக்கு ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களைச் சீரமைக்கவும், புதிய மழைநீர் வடிகால்களை அமைக்கவும் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியால், இந்த திட்டப் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் சார்பில் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாடு நீடித்த, நிலையான நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 144 இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT