Published : 27 Dec 2021 08:33 AM
Last Updated : 27 Dec 2021 08:33 AM

நீட் தேர்வு தொடர்பாக அனைத்து கட்சியுடன் குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்: ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு தகவல்

தாம்பரம் மாநகராட்சி சார்பில் பல்லாவரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

குரோம்பேட்டை: தாம்பரம் மாநகராட்சி சார்பில் பல்லாவரத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

பின்னர் கணவரை இழந்தஆதரவற்ற பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என 68 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

முகாம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறியதாவது: தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் அனைத்துகட்சிகளும் ஒருங்கிணைந்து 13.09.2021 அன்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது உடனடியாக தமிழக ஆளுநருக்குஅனுப்பப்பட்டது.

அதை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பாமல், இதுவரை அவரே வைத்துக் கொண்டிருக்கிறார். இதுஎன்ன நியாயம் என்று பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளோம். தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநரை ஒருமுறை சந்தித்துள்ளார். அமைச்சர் துரைமுருகனையும் அனுப்பி விசாரித்துள்ளார். பின்னர், நானும்உள்துறை அமைச்சரை சந்தித்தேன்அதன் பிறகும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

19 பேரை பலி வாங்கிய நீட்தேர்வை ரத்து செய்யக் கோரிமாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது. அந்த சட்டத்தை ஆளுநர் தன்கையிலேயே வைத்துக் கொண்டிருப்பது என்ன நியாயம் இருக்கிறது. இந்தக் கேள்வி அவரிடமே பலமுறை கேட்கப்பட்டுள்ளது.

எனவே, இதுகுறித்து நேரடியாக குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட இருக்கிறோம். அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சென்று குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளோம். பாஜகவின் எல்.முருகன் அமைச்சராக உள்ளதால் அவரிடம் கையெழுத்துபெற முடியவில்லை. அதிமுகவினரிடம் கேட்டபோது அவர்கள் கையெழுத்து போடவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிமுகவினரை அழைத்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை.

சட்டப்பேரவையில் அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சியினரும் நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவளித்தனர். ஆனால், குடியரசுத் தலைவரிடம் இதுகுறித்து பேசுவதற்கு அவர்கள் வர தயாராக இல்லை, கையெழுத்து போடவும் இல்லை என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x