Published : 26 Dec 2021 12:35 PM
Last Updated : 26 Dec 2021 12:35 PM

80 ஆண்டு பொது வாழ்க்கை: நல்லகண்ணுவுக்கு டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து

ஆர்.நல்லகண்ணு | கோப்புப்படம்.

விடுதலைப் போராட்டத்திலிருந்து 80 ஆண்டுகால பொது வாழ்க்கை காணும் நல்லகண்ணுவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்திலும் விவசாயிகளுக்கான போராட்டங்களிலும் பங்கேற்றவரும் ஆர் நல்லகண்ணு 1925ஆம் ஆண்டு நெல்லை மாவடடம், ஸ்ரீவைகுண்டத்தில் டிசம்பர் 26ல் பிறந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக பணியாற்றி தற்போது கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராகவும் தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராகவும் உள்ளார். இவரது பணியை பாராட்டி கட்சி நிதி வசூலித்து அளித்த 1 கோடிரூபாயை கட்சி பணிகளுக்க திருப்பி அளித்து தற்போது ஒரு எளிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.

97வது பிறந்தநாள் காணும் நல்லகண்ணுவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகவும், விடுதலைப் போராட்டம், ஏழை-எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டம், தமிழ்நாட்டின் வளங்களை காப்பதற்கான போராட்டம் என உழைத்துக் கொண்டே இருப்பவரும், சிறந்த பொதுவுடைமைவாதியுமான அன்புக்குரிய பெரியவர் ஆர்.நல்லக்கண்ணுவுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். சிறந்த உடல்நலத்தோடு இன்னும் பல ஆண்டு காலம் அவர் மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x