இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
Updated on
1 min read

கடந்த 18, 19 மற்றும் 20-ம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்களையும், அவர்களது 10 படகுகளையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில், ராமேசுவரம் மீனவர் சங்கதலைவர் என்.ஜே.போஸ், செயலாளர் வி.பி.ஜேசு, பாரம்பரிய மீனவர் சங்க நிர்வாகி ஆல்வின், ராஜீவ்காந்தி விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று தூத்துக்குடி வந்தனர். இவர்கள், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினர்.

அப்போது, ‘இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுஉள்ள தமிழக மீனவர்கள் 68 பேரையும், அவர்களது 10 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி, அமைச்சரிடம் மனு அளித்தனர். தொடர்ந்துஅமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இது தொடர்பாக, முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிஉள்ளார். தமிழக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளனர்.

‘மீனவ பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கோரிக்கைகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நேரடியாக கொண்டு செல்லுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்திக்க, கனிமொழி எம்பி முயற்சிகளை எடுத்து வருகிறார். இன்னும்சில நாட்களில் அனுமதி கிடைத்ததும், மீனவ பிரதிநிதிகளுடன் டெல்லிக்கு செல்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in