Published : 03 Jun 2014 07:00 PM
Last Updated : 03 Jun 2014 07:00 PM

பாஜக கூட்டணியில் அதிமுக?: டெல்லியில் ஜெயலலிதா பேட்டி

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சேரவேண்டிய அவசியம் தற்போது இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஜெயலலிதா, பின்னர் தமிழக அரசு இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமருடன் நடந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அப்போது தமிழக நலன் குறித்த கோரிக்கை மனு ஒன்றை பிரதமரிடம் சமர்ப்பித்தேன். காவிரி மேலாண்மைக் குழு, காவிரி நீர் வரையறைக் குழு ஆகியவற்றை விரைந்து அமைக்க வேண்டும் என்று கோரினேன்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அமைக்கப்பட்டுள்ள 3 பேர் குழுவில், தமிழகம் சார்பிலும், கேரளம் சார்பிலும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். பருவமழை தொடங்கும் முன், இக்குழு செயல்பாட்டுக்கு வருவதை பிரதமர் உறுதிப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினேன். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதி அளித்தார்.

தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் நான் கோரவில்லை. கடந்த 2010-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு முறையாக கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை. மத்திய விற்பனை வரி பங்கும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி வர வேண்டியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியை எதிர்பார்த்து, தமிழக அரசு தனது சொந்தப் பணத்தை செலவழித்துள்ளது. இந்தப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், தமிழகம் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

கூடங்குளம் உள்ளிட்ட தமிழக மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 15 சதவீதத்தை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். நான் தெரிவித்த கருத்துக்களை பிரதமர் கவனத்துடன் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைவது குறித்து பேசப்பட்டதா?

தமிழக நலன் தவிர, வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசப்படவில்லை. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான எம்.பி.க்கள் உள்ளனர். பாஜக தனித்தே மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, அக்கூட்டணிக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை.

மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக ஆதரவளிக்குமா?

அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை. அப்படி அவசியம் ஏற்படும்போது பதிலளிக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x