Last Updated : 24 Dec, 2021 04:37 PM

 

Published : 24 Dec 2021 04:37 PM
Last Updated : 24 Dec 2021 04:37 PM

40 வகையான மரப்பட்டைகள் மூலம் மர உட்பதிப்பு ஓவியம் தீட்டி அசத்தும் சிவகங்கை ஓவியர்

சிவகங்கை: சிவகங்கையில் 40 வகையான மரப்பட்டைகளை பயன்படுத்தி மர உட்பதிப்பு ஓவியம் தீட்டி ஓவியர் ஒருவர் அசத்தி வருகிறார்.

ஓவியங்களில் பெரும்பாலும் செயற்கை வர்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. அதை மாற்றும் விதமாக மரப்பட்டை வர்ணங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் ஓவியங்களை செதுக்கி வருகிறார் சிவகங்கையைச் சேர்ந்த ஓவியர் பால்ராஜ் (55). இவர் இயற்கைக்காட்சிகள், வன விலங்குகள், பறவைகள், ஆடு மேய்க்கும் பெண்கள், மனிதர்கள் என அனைத்து விதமான காட்சிகளையும் மர உட்பதிப்பு ஓவியங்களாக நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்.

நிறத்துக்காக 40 வகையான மரப்பட்டைகளை பயன்படுத்துகிறார். முதலில் காகிதத்தில் படத்தை வரைந்து அதற்கேற்ற நிறங்களை உடைய மரப்பட்டைகளை செதுக்குகிறார். பிறகு செதுக்கிய மரப்பட்டைகளை ஒரு பலகையில் வைத்து ஒட்டுகிறார். அதன்பிறகு பாலிஷ்செய்கிறார். இது பார்ப்பவர்களை கவர்கிறது.

இதுகுறித்து பால்ராஜ் கூறியதாவது: மரங்கள் என்றலே மனதுக்குள் ஒரு பசுமையை ஏற்படுத்தும். ஒவ்வொரு மரத்துக்கும் நிறங்கள் உண்டு. கடந்த காலங்களில் செடி, மரங்களில் இருந்தே வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் செயற்கைக்கு மாறிவிட்டனர். மரப்பட்டைகளின் நிறக் கலவையை கொண்டு உருவாக்கும் ஓவியங்களை மர உட்பதிப்பு ஓவியம் என்போம்.

மரப்பட்டைகளை மட்டுமே பயன்படுத்துவேன். செயற்கை நிறங்களை பயன்படுத்த மாட்டேன். மா, பலா, பூவரசம் உள்ளிட்ட பெரும்பாலும் நாட்டு வகை மரப்பட்டைகளை பயன்படுத்துகிறேன். மரப்பட்டைகளை செதுக்க ‘போவாள்’ என்ற மெல்லிய ரம்பத்தை பயன்படுத்துகிறேன், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x