Published : 24 Dec 2021 10:41 AM
Last Updated : 24 Dec 2021 10:41 AM

வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் நட விருப்பமா?- மானிய உதவியுடன் வழிகாட்டுகிறது தமிழக வேளாண்துறை

குறிஞ்சிப்பாடி பகுதி வயல் வரப்புகளில் அரசு மானிய உதவியுடன் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

கடலூர்

வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம் தமிழக அரசின் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் தின் கீழ் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விவசாயிகள் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள திம்மராவுத்தன்குப்பம் கிராமத்தில் விவசாயி சிகாமணி வயலில் தேக்கு,செம்மரம்,வேங்கை மற்றும் மகோகனி ஆகிய மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை கடலூர் வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் தொடங்கி வைத்தார்.

“தற்போது குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பருமமழை முடிந்து தண்ணீர் வடிந்திருக்கும் இச்சூழல் மரக்கன்றுகளை நடுவடுதற்கான ஏற்ற சூழல்” என்று குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநர் பூவராகவன் அப்போது தெரிவித்தார். இந்நிகழ்வை வேளாண் அலுவலர் அனுசுயா, துணை வேளாண்அலுவலர் வெங்கடேசன், உதவிவேளாண் அலுவலர்கள் கார்த்திகேயன், சிவக்குமார்,வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ், பயிர் அறுவடை சோதனைப் பணியாளர் சுந்தர் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

மானிய உதவி

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு,செம்மரம், வேங்கை,மகோகனி,பலா உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்காக மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மானியம் தரப்படும். வரப்பு ஓரம் நடுவதற்கு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், தோப்பாக நடுவதற்கு ஏக்கருக்கு 160 கன்றுகளும் வழங்கப்படுகின்றன.

‘உழவன்’ செயலியில் முன்பதிவு செய்த விவசாயிகள் இதைப் பெறலாம்.

அவர்களின் நிலங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்வர்.

அதன்பின் சான்று அளித்து, உதவி வேளாண் இயக்குநர் அலுவலகம் மூலம் உரிய கன்றுகளை பெறுவதற்கான ஆணை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து,நெய்வேலி நகரியத்தில் உள்ள வன விரிவாக்க மைய நாற்றங்காலில் தேவையான மரக்கன்றுகளை எடுத்து வந்து வயலில் நடவு செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x