Published : 23 Dec 2021 09:57 PM
Last Updated : 23 Dec 2021 09:57 PM

ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு குணமடைந்த மூவர்: நேரில் நலம் விசாரித்து அனுப்பிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்ப உள்ள மூன்று நபர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து இன்று (23.12.2021) வீடு திரும்ப உள்ளவர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்விற்கு பிறகு அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான நைஜீரியாவில் இருந்து வந்தவர், அவர் சகோதரி மற்றும் சகோதரி மகள் பாதிக்குப்பட்டு இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர். 3 பேர் குணமடைந்ததில் மகிழ்ச்சி, அவர்களை நலம் விசாரித்தேன், லேசான பாதிப்பு இருப்பதாகக் கூறினர். இவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த மீதம் உள்ள 5 நபர்கள் நாளை குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒமைக்ரானால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 31 ஆக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை சார்பாக நாடு முழுவதும் உள்ள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஒமைக்ரான் பரவல் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நாளை (24.12.2021) ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

இன்று ஒரே நாளில் 33 பேர் ஒமைக்கரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை, கடந்த 20 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டறிந்தவர்களின் முடிவுகளை தான் தற்போது மத்திய அரசு ஆய்வகம் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் தடுப்பூசி போடுவது குறைவாக இருப்பதால் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இந்த வாரம் மயிலாடுதுறை சென்று அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மேலும் தமிழகத்தில் 93 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அடுத்து வரும் மாபெரும் தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒமைக்ரான் உடல் ரீதியான பாதிப்பு குறைவாக இருந்தாலும் நோய்ப் பரவல் அதிகமாக உள்ளது. அனைத்து விழா கொண்டாட்டங்களிலும் தனி மனித கட்டுப்பாடு அவசியம். இந்நிலையில் ஒமைக்கரான் பாதிப்பு ஏற்பட்டால் ஆக்சிஜன் வசதி தேவைப்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி. இருப்பினும் தமிழகம் போதிய மருத்துவ கட்டமைப்புகளுடன் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x