Published : 23 Dec 2021 12:58 PM
Last Updated : 23 Dec 2021 12:58 PM

நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு

நளினி | கோப்புப் படம்.

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை சிறைக் கைதியாக உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளான நளினி, முருகன் உள்பட 7 பேர் 30 ஆண்டுகளாக ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்று சிறையில் இருக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ''இரண்டு மாதங்களுக்கு முன்பு தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தன்னைக் கவனித்துக்கொள்ள தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டுமென்றும் மனு கொடுத்திருந்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவரது தாயாரின் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாகத் தமிழக அரசின் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசின் விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

முதல்வரின் தனிப்பிரிவில் மனு:

இதற்கிடையில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அவரது தாயார் ஒரு மனுவை அளித்திருந்தார். அதில், ''வயது மூப்பின் காரணமாக உடல் மற்றும் உளவியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறேன். என் இறுதிக் காலத்திலாவது மகள் நளினி என்னுடன் வாழ ஏங்குகிறேன். நளினி, 31 ஆண்டுகள் சிறைவாசத்தால் மன அழுத்தம், உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

எனவே, மனிதநேய அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும். 7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அறிந்தேன். அதன்படி ஆளுநரிடம் தாங்கள் நினைவூட்டி விடுதலைக்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

30 நாள் பரோல்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி நளினியின் தாயார் பத்மாவின் மனுவைப் பரிசீலனை செய்து முடிவெடுத்துவிட்டதாகவும், 30 நாட்கள் பரோல் வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நளினியின் தாயார் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவரது வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x