Published : 23 Mar 2016 02:17 PM
Last Updated : 23 Mar 2016 02:17 PM
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து விஜயகாந்த் தவறான முடிவை எடுத்துவிட்டார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "கூட்டணி தாமதமாகி கொண்டிருக்கிறது என்ற காரணத்தால் 234 தொகுதிகளிலும் போட்டியிட போகிறோம். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம். என்னை பொறுத்தமட்டில் விஜயகாந்த் பாஜகவோடு வந்திருந்தால் அவர் என்ன நோக்கத்திற்காக இரண்டு கழகங்களையும் எதிர்த்து கருத்தை பரிமாறி வந்தாரோ அது நிறைவேறி இருக்கும். ஆனால் மக்கள் நலக் கூட்டணியில் அவர் இணைந்திருப்பதால் எந்தொரு பலனும், பலமும் கிடைக்கப் போவதில்லை. தமிழக அரசியலில் பலவீனப்பட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பாஜகவோடு இணைந்திருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம்.
மக்கள் நலக் கூட்டணிக்கு எந்த பின்புலமும் கிடையாது. மக்கள் பின்பற்றக் கூடிய எந்த ஒரு தலைவரும் அதில் கிடையாது. விஜயகாந்த் தவறான முடிவை எடுத்து பலவீனப்பட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
வாக்குகள் சிதறக்கூடாது என்ற ஒரே நோக்கில் தான் கூட்டணி முயற்சிகள் மேற்கொண்டோம். அவர்கள் வாக்குகள் சிதறுவதற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் மக்கள் நலக் கூட்டணியால் கொண்டு வர இயலாது.
கூட்டணி முயற்சி செய்தோம். அவர்கள் எங்களோடு இணையாதது அவர்களுக்கு தான் இழப்பே தவிர பாஜகவிற்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை. நல்ல வாய்ப்பை விஜயகாந்த் நழுவ விட்டுவிட்டார் என்பது என் கருத்து" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT