Last Updated : 22 Dec, 2021 06:47 PM

 

Published : 22 Dec 2021 06:47 PM
Last Updated : 22 Dec 2021 06:47 PM

தென்காசியில் திருவாடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை | கோப்புப் படம்.

மதுரை: தென்காசி மாவட்டத்தில் திருவாடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான பல்வேறு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் காசிதர்மம் ஊராட்சியில் அய்யா வழி கோயிலில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை மீண்டும் கட்டித் தரவும், கோயில் அமைந்திருக்கும் பகுதியின் குறுக்கே செல்லும் ஊராட்சி குடிநீர் குழாயை அகற்றவும் கோரி காசிதர்மம் அய்யா வழி கோயில் அறக்கட்டளை சார்பில் தென்காசி முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் யாரும் ஆஜராகாத நிலையில் அய்யா வழி கோயில் அறக்கட்டளைக்கு சாதகமாக ஒருதலைப்பட்ச தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி காசிதர்மம் ஊராட்சித் தலைவர், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.முகமது முகைதீன் வாதிட்டார்.

விசாரணைக்குப் பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

''காசிதர்மம் பகுதியில் திருவாடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான நிலங்களும், ஊராட்சி நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது வருவாய் ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. ஆதினத்துக்குச் சொந்தமாகப் பல ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் பலர் கட்டிடம் கட்டியுள்ளனர். இது தொடர்பாக ஆதினம் உதவியுடன் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அறநிலையத்துறை இணை ஆணையர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முன்னதாக ஆதினம் நிலங்களில் எந்த மாதிரியான ஆக்கிரமிப்பு உள்ளது? ஆக்கிரமிப்பாளர்கள் யார்? என்பதை இறுதி செய்து, அவர்களுக்குக் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நோ்ட்டீஸ் அனுப்ப வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டால் சட்டப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x