Published : 22 Dec 2021 01:03 PM
Last Updated : 22 Dec 2021 01:03 PM

தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நலனுக்கான நடவடிக்கை என்ன?- வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

கோப்புப் படம்

சென்னை: நீலகிரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நலன் காக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ''மத்திய அரசின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று முடிந்தது. இதில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ நீலகிரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நலன் குறித்து மத்திய அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பி இருந்தார்.

கேள்விகள் பின்வருமாறு:

"கேள்வி எண் 2284 (17.12.2021)

1. தேயிலை மற்றும் காபித் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க, குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் நலன் காக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்; அது குறித்து, கடந்த 3 ஆண்டு காலப் புள்ளிவிவரங்கள் தருக.

2. மருத்துவக் கருவிகள், உயர்கல்வி, குறிப்பாக, தமிழ்நாட்டின் நீலகிரி மலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள் குறித்த விவரங்கள் தருக.

3. இல்லை என்றால், அதற்கான காரணங்கள் தருக.

இதற்கு மத்திய வணிகம், தொழில்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் அளித்த விளக்கம்:

தேயிலை மற்றும் காபித் தோட்டத் தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் நல்வாழ்விற்கான நடவடிக்கைகள், 1951 தோட்டத் தொழிலாளர் சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகின்றன. அந்தச் சட்டத்தின்படி, வேலை தருவோர், தொழிலாளர்களுக்கு, வீடு, மருத்துவ வசதிகள், பேறுகால உதவிகள் மற்றும் இதுபோன்ற சமூக நல உதவிகளை வழங்குதல் வேண்டும்.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, குடிநீர், உணவகங்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் மனமகிழ் மன்ற நிகழ்வுகள் போன்ற வசதிகள், ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர் சட்டம் தவிர வேறு பல பாதுகாப்புச் சட்டங்களும் உள்ளன.

1. உழைப்போருக்கான இழப்பு ஈட்டுச் சட்டம் 1923 (Workmen s Compensation Act,1923) 2. பணிக்கொடைச் சட்டம் (Payment of Gratuity Act 1972) 3. பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் (The Emloyees Provident fund & Miscellaneous Provisions Act 1952) 4. அசாம் தேயிலைத் தோட்ட வருங்கால வைப்பு நிதி, ஓய்வு ஊதிய நிதி, மற்றும் வைப்பு இணைக்கப்பட்ட காப்பு ஈட்டு நிதிச்சட்டம் 1955 (அசாமுக்கு மட்டும்) Assam Tea Plantation Provident Fund, Pension fund and Deposit Linked Insurance Fund Scheme Act 1955) ஊக்கத்தொகை வழங்கும் சட்டம் 1965 (Payment of Bonus Act 1965), ஊதியச் சட்டம் 1936 (Payment of Wages Act 1936) ஆகிய சட்டங்களின்படி, தோட்டத் தொழிலாளர்களுக்குப் பல்வேறு உதவிகள், பணிக்கொடை, ஊக்கத்தொகை, வருங்கால வைப்பு நிதி, சம ஊதியம் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சட்டங்களின் விதிகள், இப்போது தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் குறியீடு 2020, சமூகப் பாதுகாப்புக் குறியீடு, தொழில்துறை உறவுகளின் குறியீடு 2020 மற்றும் ஊதியக் குறியீடு 2020 ஆகிய நான்கு குறியீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நிகழும் ஆண்டில், தேயிலை வாரியம் மற்றும் காபி வாரியம் ஆகியவை நீலகிரி மலைப்பகுதியில் மேலும் பல நலத்திட்டங்கள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்புப் பயிற்சிகள், நீலகிரி மலை தேயிலை மற்றும் காபித் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, தேயிலை விரிவு மற்றும் வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த காபி வளர்ச்சித் திட்டங்களின் கீழ் ஏற்பாடு செய்துள்ளன.

மேற்கண்ட திட்டங்களின்படி, தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கு உடல்நலன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்".

இவ்வாறு மதிமுக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x