வடகிழக்கு பருவமழை நீடித்து பருவம் தவறி பெய்த மழையால் உதகையில் தாமதமாக பொழியும் உறைபனி: கடும் குளிரால் பொதுமக்கள் அவதி; கருகும் தாவரங்கள்

வடகிழக்கு பருவமழை நீடித்து பருவம் தவறி பெய்த மழையால் உதகையில் தாமதமாக பொழியும் உறைபனி: கடும் குளிரால் பொதுமக்கள் அவதி; கருகும் தாவரங்கள்
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை நீடித்ததால், உதகையில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது. கடும் குளிர் வாட்டி வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக அக்டோபர் மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கும். அதன் பிறகு நவம்பரில் உறைபனி சீசன் தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை உறைபனியின் தாக்கம் நீடிக்கும். இந்த காலங்களில் வெப்பநிலை அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தை தொடும். சில நாட்களில் பூஜ்ஜியத்துக்கும் கீழ் இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறி பயிர்கள் ஆகியவை கருகிவிடும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நீடிப்பு, பருவம் தவறி பெய்து வந்த மழை உள்ளிட்ட காரணங்களால் உறைபனி தாமதமானது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் நேற்று முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சம் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. தலைக்குந்தா, பைக்காரா, கிளன்மார்கன், எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி, கோரகுந்தா, கேத்தி பாலாடா ஆகிய பகுதிகளில் சில இடங்களில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவானது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த ஆண்டு உறைபனி தாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவன பருவநிலை ஆய்வாளர்கள் கூறும்போது, "கடல்மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், மலை மேலிட பகுதிகளான உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில், இந்த ஆண்டு கடும் உறைபனி நிலவும் வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டமின்றி தொடர்ந்து காணப்பட்டால், வெப்பநிலை மைனஸில் செல்லவும் வாய்ப்புள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in