

வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: சென்னை ராயபுரம் பகுதியில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்து மறைந்த மக்கள் மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரனின் மூன்றாவது நினைவு நாள் இன்று (நேற்று). இந்த நாளில் அவரது சேவையை நினைவு கூர்வோம். அவரது நினைவை போற்றுவோம்.
வடசென்னை மக்களால் போற்றப்படும் மருத்துவர் ஜெயச்சந்திரனின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.