Published : 27 Mar 2016 11:17 AM
Last Updated : 27 Mar 2016 11:17 AM

தேர்தல் நிதி அளிப்பதில் சுறுசுறுப்பு காட்டும் மதிமுகவினர்

தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி இடையே கூட்டணி அமைந்ததையடுத்து தேர்தல் நிதி அளிப்பதில் மதிமுகவினர் சுறுசுறுப்பு காட்ட தொடங்கியுள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மதிமுகவில் சுமார் ரூ.15 கோடி தேர்தல் நிதி குவிந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் நிதி வசூலில் மாவட்டச் செயலாளர்கள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி அளவுக்கு தேர்தல் நிதி அளித்துள்ளனர். ஆரம்பத்தில் சற்று தயக்கம் காட்டிய மதிமுக நிர்வாகிகள், தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்ததும் உற்சாகமாக தேர்தல் நிதி அளித்து வருகின்றனர். சென்னையின் 3 மாவட்ட மதிமுக சார்பில் முதல்கட்ட தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி, கட்சித் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடக்கிறது. இதில், வைகோ பங்கேற்று தேர்தல் நிதியை பெற்றுக் கொள்கிறார். சுமார் ரூ.3 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x