Published : 19 Dec 2021 09:31 PM
Last Updated : 19 Dec 2021 09:31 PM

அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்: நிரந்தரத் தீர்வு காணுமா மத்திய அரசு?- வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

கோப்புப் படம்

சென்னை: ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 55 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். சனி இரவு 43 பேரும், ஞாயிறு மதியம் 12 பேரும் என மொத்த 55 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படுவதும், அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் கூட படகுகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் பல ஆண்டு கோரிக்கையாக கிடப்பில் கிடக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் தமிழக மீனவர்களின் காட்சிகள் மாறாத கதையாக இருக்கிறது.

ராமேசுவரத்தில் நடந்தது என்ன? ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று இரவு தனுஷ்கோடி இலங்கை நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

அப்போது அப்பகுதியில் மீன்படித்த ராமேசுவரத்தைச் சேர்ந்த தென்னரசு, லியோன் பிரிட்டோ, கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளை பிடித்து, அதிலிருந்த சக்தி, கோபி, குட்வின், ரகு, பிரபு, கருமலையான் உள்ளிட்ட 43 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனர். இந்த சோகமும், அதிர்ச்சியும் அடங்குவதற்கு உள்ளதாகவே மண்டபம் தென்கடல் பகுதியிலிருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்ற விசைப்படகுகள் இன்று (டிச.19) அதிகாலை மீன்பிடிக்கச் சென்றன.

இந்நிலையில் இன்று மதியம் இலங்கையின் நெடுந்தீவு தலைமன்னாருக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சபரிதாஸ், இவரது அண்ணன் அருளானந்தம் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறைப்பிடித்த மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று பிடிக்கப்பட்ட 43 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாளை ஆர்ப்பாட்டம்: ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா கூறும்போது, ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்கிறது. இதனால் ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 6 விசைப்படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். இன்று 2 படகுகளையும், 12 மீனவர்களையும் பிடித்துள்ளனர்.

இம்மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைபிடித்ததை கண்டித்தும், உடனடியாக விடுவிக்கக் கோரியும் நாளை முதல் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

முதல்வர் கடிதம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து அவர் கடிதமும் எழுதியுள்ளார்.

முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் பாதுப்புடன் திருப்பி அனுப்பி வைக்க உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம் வருமாறு: இக்கடிதத்தின் வாயிலாக கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

டிசம்பர் 18 ஆம் தேதி இரவு பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 43 மீனவர்களையும், 6 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். பின்னர் டிச.19 ஆம் தேதி மண்டபம் மீனவர்கள் 12 பேரையும் அவர்களின் இரண்டு படகுகளையும் பிடித்துச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நிகழ்த்தும் இத்தகைய அடக்குமுறை வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக இலங்கைக் கடற்படைக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியும் கூட இதே நிலை தொடர்கிறது.

2021 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 19 சம்பவங்கள் நடந்துள்ளன. மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் கூட அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டில் இதுவரை இரு வேறு சம்பவங்களில் மொத்தம் 5 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை இவ்வாறாக குறுக்கு வழியில் ஒடுக்கும் முயற்சிகளை இனியும் அனுமதிக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இதனை இலங்கை அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டுகிறேன். 55 மீனவர்களையும், இலங்கையின் வசம் உள்ள 73 படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x