Published : 19 Dec 2021 07:08 PM
Last Updated : 19 Dec 2021 07:08 PM

55 மீனவர்கள், 8 படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழக முதல்வரிடன் உறுதி அளித்துள்ளார்.
நேற்று 43; இன்று 12: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று இரவு தனுஷ்கோடி இலங்கை நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

அப்போது அப்பகுதியில் மீன்படித்த ராமேசுவரத்தைச் சேர்ந்த தென்னரசு, லியோன் பிரிட்டோ, கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளை பிடித்து, அதிலிருந்த சக்தி, கோபி, குட்வின், ரகு, பிரபு, கருமலையான் உள்ளிட்ட 43 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனர். இந்த சோகமும், அதிர்ச்சியும் அடங்குவதற்கு உள்ளதாகவே மண்டபம் தென்கடல் பகுதியிலிருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்ற விசைப்படகுகள் இன்று (டிச.19) அதிகாலை மீன்பிடிக்கச் சென்றன.

இந்நிலையில் இன்று மதியம் இலங்கையின் நெடுந்தீவு தலைமன்னாருக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சபரிதாஸ், இவரது அண்ணன் அருளானந்தம் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறைப்பிடித்த மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x