Published : 19 Dec 2021 07:58 AM
Last Updated : 19 Dec 2021 07:58 AM

பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டித்ததால் நடத்துநரை கல்லால் தாக்கிய பள்ளி மாணவர்கள்: பேருந்தை நிறுத்தி மறியலில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்

சென்னை ஓட்டேரியில் மாநகரப் பேருந்து ஓட்டுநரை பள்ளி மாணவர்கள் தாக்கியதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பேருந்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள். படம்: ம.பிரபு

சென்னை

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூருக்கு நேற்று மாலை மாநகரப் பேருந்து (29-ஏ) சென்று கொண்டிருந்தது. புரசைவாக்கம் மற்றும் டவுட்டன் பகுதியில் ஏறிய பள்ளி மாணவர்கள், பேருந்தில் தொங்கியபடியும், கூரை மீது ஏறியும், சாலையில் கால்களைத் தேய்த்தபடி ஆபத்தான முறையிலும் பயணம் செய்தனர்.

இதை பேருந்து நடத்துநர் கண்டித்தார். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து பயணிகள் மற்றும் நடத்துநரை கிண்டல் செய்தவாறு பயணத்தை தொடர்ந்தனர். ஒருகட்டத்தில் மாணவர்களின் அத்துமீறல்களை நடத்துநர் எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், கீழே இருந்த கற்களை எடுத்து நடத்துநரைத் தாக்கினர். இதனால் நடத்துநர் மற்றும் ஒரு பெண் பயணி காயமடைந்தனர். உடனே, மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பேருந்தை சாலையிலேயே ஓட்டுநர் நிறுத்தினார். இதைக் கண்ட மற்ற பேருந்து ஓட்டுநர்களும் பேருந்தை நிறுத்தி, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய மாணவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த ஓட்டேரி போலீஸார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை சமாதானம் செய்து, போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் உறுதியளித்தனர்.

இந்தப் போராட்டம் காரணமாக ஓட்டேரி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை புரசைவாக்கம் மற்றும் ஓட்டேரி பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x