

காங்கோ நாட்டில் இருந்து சென்னை வந்த 38 வயதுள்ள ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் வசிக்கும் பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கடந்த 15-ம் தேதி தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் அவருடன் வந்த, அவரது கணவர் மற்றும் மகனுக்கு கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 15 பேருக்கு நேற்று முன்தினம் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்ட பெண்ணின் தந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இதற்கிடையில், பையூர் கிராமத்தில் 2 பேர் பாதிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து, கரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனையை செய்யாறு சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியாராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். பையூர் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேரி டம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மேலும், பையூர் கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம மக்களை பரிசோதனை செய்யும் பணி இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.