Last Updated : 17 Dec, 2021 08:55 PM

 

Published : 17 Dec 2021 08:55 PM
Last Updated : 17 Dec 2021 08:55 PM

புதுச்சேரி மணப்பட்டில் 100 ஏக்கரில் திரைப்பட நகரம்   

புதுச்சேரி: புதுச்சேரி மணப்பட்டில் 100 ஏக்கரில் திரைப்பட நகரமும், பொழுதுபோக்கு மையமும் அமைகிறது. இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்க விரைவில் டெண்டர் விடப்படவுள்ளதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்ஸ், மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்திய திரையுலக மேதை சத்யஜித் ரே நூற்றாண்டு திருவிழாவை புதுச்சேரியில் இன்று இரவு தொடங்கினர்.

புதுச்சேரி அலையன்ஸ் பிரான்ஸ் திரையரங்கில் சத்யஜித் ரே உருவாக்கிய உலக அளவில் இந்திய திரை உலகுக்கு பெருமை சேர்த்து விருதுகள் பல வென்ற 9 திரைப்படங்களும், ஷியாம் பெனகல் உருவாக்கிய சத்யஜித் ரே ஆவணப்படமும் திரையிடப்படவுள்ளது. முதல் திரைப்படமாக உலகப் புகழ் பெற்ற பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்டது.

முன்னதாக நடந்த தொடக்க நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "புதுச்சேரி மணப்பட்டில் 100 ஏக்கரில் திரைப்பட நகரமும், பொழுதுபோக்கு மையமும் அமையும்.

இதை வணிகரீதியில் பயன்படுத்தமுடியும். இதற்கான விரிவான அறிக்கை தயார் செய்ய டெண்டர் விடப்படும். வரும் மார்ச்சில் இந்திய-பிரெஞ்சு விழாக்கள் சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடத்தப்படவுள்ளது. அப்போது உணவு திருவிழா, திரைப்படத்திருவிழா ஆகியவை நடக்கும்." என்று குறிப்பிட்டார்.

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கவுரவத் தலைவர் எழுத்தாளர் தமிழ்செல்வன் பேசுகையில், "சத்யஜித் ரேவுக்கு இந்தியாவை தாண்டியும் பிரான்ஸில் அதிகபுகழ் உண்டு. உள்ளூரில் கால்பதித்து வெளிநாட்டளவில் பாய்ச்சலை காட்டியவர் அவர். இந்திய சினிமாவை உலகரங்குக்கு கொண்டு சென்றவர் அவர்" என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் அலையன்ஸ் பிரான்ஸ் தலைவர் டாக்டர் நல்லம் சதீஷ், விழா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லீலா உட்பட பலர் பங்கேற்றனர். எடிட்டர் லெனின் தவில் வாசித்து நிகழ்வை தொடக்கிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x