Last Updated : 17 Dec, 2021 07:23 PM

 

Published : 17 Dec 2021 07:23 PM
Last Updated : 17 Dec 2021 07:23 PM

திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு அனுமதி: 8 மாதத்திற்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் | கோப்புப் படம்.

நாகர்கோவில்:: திற்பரப்பு அருவியில் 8 மாதத்திற்கு பின்னர் இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து உற்சாகமடைந்தனர். வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவி சிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோனோர் திற்பரப்பிற்கு வந்து அருவியில் ஆனந்த குளியலிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து திற்பரப்பு அருவியில் அனுமதி மறுக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம் உட்பட பிற சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் திற்பரப்பு அருவிக்கான தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்ததுடன், திற்பரப்பு அருவியை நம்பி வாழ்வாதாரம் பெற்று வந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவாய் இன்றி அவதிக்குள்ளாகினர், இதனால் சுற்றுலா ஆர்வலர்களும், வியாபாரிகளும் கன்னியாகுமரியில் பிற சுற்றுலா மையங்களை போன்று திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து திற்பரப்பு அருவியில் இன்று முதல் தடையை நீக்கி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த அனுமதி வழங்கினார். இதனால் நேற்றே திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகத்தினர் திற்பரப்பு அருவி பகுதியில் குளிக்கும் இடங்களில் வழுக்கும் நிலையில் காணப்பட்ட பாசிகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.

இதைப்போல் சிதிலமடைந்து காணப்பட்ட அருவி சுற்றுப்புறங்களை சீரமைத்தனர். இதைத்தொடர்ந்து இன்றுகாலை முதல் திற்பரப்பு அருவி நுழைவு வாயில் திறக்கப்பட்டு நுழைவு சீட்டு விநியோகம் செய்யப்பட்டு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி வந்திருந்த சுற்றுலா பயணிகள், மற்றும் ஐயப்ப பக்தர்கள் திற்பரப்பு அருவியில் வந்து ஆனந்த குளியலிட்டனர். தற்போது கடும் வெயில் அடித்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் திறபரப்பு அருவியில் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 8 மாதத்திற்கு பின்னர் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதால் அப்பகுதிகளில் உள்ள கடைகள், விடுதிகள் நேற்று திறக்கப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கூட்டம் குறைவாக இருந்தாலும் விடுமுறை நாளான சனி, ஞாயிறில் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திற்பரப்பு அருவிக்கு முககவசத்துடன் வருவோரை மட்டுமே அனுமதிக்கின்றனர். இதைப்போல் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டம் கூடாமல் அருவியில் குளிக்குமாறு திற்பரப்பு பேரூராட்சி சார்பில் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x