Last Updated : 17 Dec, 2021 06:48 PM

 

Published : 17 Dec 2021 06:48 PM
Last Updated : 17 Dec 2021 06:48 PM

முன்ஜாமீன் மனு தள்ளுபடி; முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவு: 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்

விருதுநகர்

மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவனதாக கூறப்படுகிறது. போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தற்போது அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கி கொடுப்பதாக ரூ.30 லட்சம் பணம் வாங்கியதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீதும் கடந்த நவம்பர் 18 அம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றியச் செயலரும் முன்னாள் சபாநயாகர் காளிமுத்துவின் கடைசி தம்பியுமான விஜய நல்லதம்பி என்பவர் கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் ரூ.1.60 கோடி பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் அண்ணன் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

மேலும், கட்சிக் கூட்டங்கள் நடத்தியற்காக நான் செலவு செய்த ரூ.1.50 கோடி வரை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி எனக்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எல்லா வகையிலும் சுமார் ரூ.3 கோடி வரை என்னை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஏமாற்றியதாகவும் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பலராமன், பாபுராஜ் மற்றும் முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, இன்று காலை விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அருகே தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் வந்ததும், உடனடியாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அங்கிருந்து காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். இதனால், அதிமுகவினர் பரபரப்பு அடைந்தனர்.

மோசடி வழக்கில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாக கூறப்படுகிறது.

மேலும், 4 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜியைத் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x