நெல்லை பள்ளிச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி: தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்.
பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: நெல்லையில் உள்ள பள்ளியின் கழிப்பறைச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை பொருட்காட்சி திடல் அருகே, 100 ஆண்டுகள் பழமையான பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

நெல்லை பள்ளிக்கூடத்தில் கழிப்பறைச் சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை தருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்; மூவர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவமும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும் அரசு வழங்க வேண்டும்!''

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in