

கல்வி உதவித்தொகை பெறுவதில் சிறுபான்மை மாணவர்களுக்குக் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்தார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று மத்திய அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வியிடம் நேரில் சந்தித்துக் கடிதம் ஒன்றை அளித்து முறையிட்டார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
''கல்வி உதவித்தொகைக்கான பல திட்டங்களின் விண்ணப்பக் கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுபான்மை மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு வரையிலான உதவித்தொகை மற்றும் சிறுபான்மை மாணவிகளுக்கான பேகம் ஹஸ்ரத் மகால் தேசிய உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்பத் தேதி டிசம்பர் 15 உடன் முடிந்துவிட்டது.
நவம்பரில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. கால அவகாசம் போதாதால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாமல் திணறுகிறார்கள். மற்ற திட்டங்களுக்குக் கால நீட்டிப்பு இருக்கும்போது இந்த இரு திட்டங்களுக்கு மட்டும் அந்தச் சலுகை மறுக்கப்படுவது என்ன நியாயம்?
மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவும்''.
இவ்வாறு சு.வெங்கடேசன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.