பெண் திருமண வயது 21 ஆக உயர்வு; பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும்: மக்கள் நீதி மய்யம்

பெண் திருமண வயது 21 ஆக உயர்வு; பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும்: மக்கள் நீதி மய்யம்
Updated on
1 min read

சென்னை: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்துப் பேசினார். இதற்காக, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க மத்திய அரசு செயற்குழு ஒன்றை அமைத்திருந்தது. ஜெயா ஜேட்லி தலைமையிலான இந்தச் செயற்குழு பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21ஆக உயர்த்தும் பரிந்துரையை டிசம்பர் தொடக்கத்தில் சமர்ப்பித்தது.

செயற்குழுவின் யோசனையை ஏற்றுப் பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இனி இது விரைவில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறும்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

''பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும்''.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in