Published : 17 Dec 2021 10:35 AM
Last Updated : 17 Dec 2021 10:35 AM

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி: புழல் மாணவர் தற்கொலை

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: புழல் பகுதியைச் சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவர் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புழல் அடுத்த காவாங்கரையில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சுஜித் (19).

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மூன்று முறை நீட் தேர்வு எழுதினார். கடந்த இரண்டு முறை தோல்வி அடைந்தவர் இந்த முறை குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றார். இதனால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலையில் சுஜித் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு எப்படியாவது மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துவிடும் என்று நம்பி விடுமுறையில் நாடு திரும்பிய தந்தை ஆனந்தும், பல இடங்களில் முயன்றும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. இதனால் மாணவர் சுஜித் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாதாகக் கூறப்படுகிறது.

தந்தை ஆனந்த் வெளிநாடு சென்ற நிலையில், மளிகைப் பொருட்கள் வாங்க அருகிலுள்ள கடை வீதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சுஜித்தின் தயார், படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சுஜித் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புழல் காவல்துறையினர் சுஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x