Published : 16 Dec 2021 07:54 PM
Last Updated : 16 Dec 2021 07:54 PM

ஒல்லியான தேகம், தலையில் விக், முகமூடி: 16 கிலோ தங்கம், 1 கிலோ வைர நகைகள் திருடிய நபரைப் பிடிக்க 8 தனிப்படை அமைப்பு

வேலூர்: வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் தலையில் விக்குடன் முகமூடி அணிந்து16 கிலோ தங்க நகைகள், 1 கிலோ வைர நகைகளை திருடிச் சென்ற நபரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி.சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உள்ளது. இந்தக் கடையின் பின்புறம் ஏ.சி காற்று வெளியேறும் பகுதியை துளையிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்து மர்ம நபர் ஒருவர் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை காலை கிடைத்த தகவலின்பேரில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கடையினுள் புகுந்த ஒல்லியான தேகத்துடன் இருக்கும் நபர் ஒருவர் சிங்கத்தின் முகமூடியுடன் விக் அணிந்துள்ளார். அவர் அனைத்து கண்காணிப்பு கேமராக்களிலும் ஸ்ப்ரே அடித்துவிட்டு ஷோகேஸ்களில் இருந்த விலை உயர்ந்த நகைகளை திருடிக்கொண்டு தப்பியுள்ளார். லாக்கரை உடைக்க முடியாததால் அதிலிருந்த சுமார் 70 கிலோ தங்க நகைகள் தப்பியது தெரியவந்தது.

திருடுபோன நகைகளின் விவரங்கள் குறித்து டிஐஜி ஏ.ஜி.பாபு நேரடியாக ஆய்வு செய்தார். இதில், 15 கிலோ 900 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி, மோதிரம், வளையல்கள், நெக்லஸ்கள், கம்மல்கள் மற்றும்819.865 கிராம் எடையுள்ள வைர மோதிரங்கள், 53.758 கிராம் எடையுள்ள சிறிய வைர மோதிரங்கள், 240.358 கிராம் எடையுள்ள வைர நெக்லேஸ்கள், 100.577 கிராம் எடையுள்ள பிளாட்டினம் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக கடையின் மேலாளர் பிரதீஷ் அளித்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் அருகில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதி வழியாக வந்து சென்றுள்ளார் என்பதால் அந்தப் பகுதியில் கிடைத்த மர்ம நபரின் கைவிரல் ரேகைகள் மற்றும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட விக்கை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், நகைக்கடைகளில் துளையிட்டு திருடும் கும்பல்களின் பட்டியலை தயாரித்து விசாரித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான நபர் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல நபரைப் போன்று இருப்பதால் அதுகுறித்து தனியாக விசாரித்து வருகின்றனர். தனிப்படையினர்கர்நாடகா, தெலங்கானா,ராஜஸ்தான் மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

ஐ.ஜி. சந்தோஷ்குமார் பேட்டி:

இந்நிலையில், திருடுபோன நகைக்கடையில் வடக்கு மண்டல ஐ.ஜி சந்தோஷ்குமார் இன்று (டிச.16)நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஒரு நபர் மட்டும் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று ஏற்கெனவே நடைபெற்ற சில திருட்டு சம்பவங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்.திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்களின் விவரங்களையும் சேகரித்து விசாரித்து வருகிறோம்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x