போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மத்திய அரசுக்கு இணையாக உயர்வு: தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மத்திய அரசுக்கு இணையாக உயர்வு: தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு
Updated on
1 min read

ஆதிதிராவிட மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையானது மத்திய அரசு வழங்கும் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டம் மூலம் பராமரிப்புப் படியை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தகுதியிருந்தும் பயன் அடையாத தமிழக மாணவர்களுக்காகச் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, வீட்டிலிருந்து வரும் மாணவர்கள், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு, படிப்புகளுக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு ரூ.1,200 முதல் ரூ.4,200 வரை உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு தனது போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் பராமரிப்பு படியை ரூ.2,500 முதல் ரூ.13,500 வரை வழங்கி வருகிறது.

இதன் காரணமாக, சிறப்பு போஸ்ட் மெட்ரிக் திட்டத்தின் உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து, மாநில அரசின் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கும் தொகைக்கு இணையாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில், “மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப் படியை மத்திய அரசின் திட்ட தொகைக்கு இணையாக உயர்த்தப்படுகிறது. அதன்படி, வீட்டிலிருந்து பள்ளி வரும் மாணவர்களுக்குப் படிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.2,500 முதல் ரூ.7,000 வரையும், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.13,500 வரையும் உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ. 8.79 கோடி நிதி ஒதுக்கி ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in