Published : 15 Dec 2021 03:20 PM
Last Updated : 15 Dec 2021 03:20 PM

பொட்டாஷ் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: விஜயகாந்த்

கோப்புப் படம்

சென்னை: பொட்டாஷ் விலை உயர்வைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அனைத்துக் காய்கறிகள் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதேபோல் பெட்ரோல் - டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சூழலில் தற்போது பொட்டாஷ் உரம் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 50 கிலோ பொட்டாஷ் மூட்டை ஒன்று ரூ.1,040-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக வந்துள்ள ஒரு மூட்டை பொட்டாஷ் ரூ.1700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே சமயத்தில் மூட்டைக்கு ரூ.660 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே விவசாயம் செய்து வரும் நிலையில், பொட்டாஷ் விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். "உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி" என்பது போல ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு, மறுபக்கம் உரம் விலை உயர்வால் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

எனவே மத்திய அரசு மானியத் தொகையை உயர்த்தி வழங்கி, பழைய விலைக்கே பொட்டாஷ் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பொட்டாஷ் விலையைக் குறைக்க மத்திய அரசுக்குத் தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x