Published : 15 Dec 2021 01:39 PM
Last Updated : 15 Dec 2021 01:39 PM

டிசம்பர் 17-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

சென்னை: டிசம்பர் 17-ல் வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாகத் தமிழகத்தில் இன்று முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரத் தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிச.17ல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று வானிலை ஆய்வு மைய இயக்குர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''இன்று (புதன்கிழமை) டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

இன்று முதல் 5 நாட்களுக்கு (டிச.15 முதல் 19 வரை) குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்றும் நாளையும் இலங்கைக்குத் தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாளை முதல் (டிச.16 முதல் 19 வரை) தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

40-50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று

டிச.17 முதல் 19 வரை தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டிச.17-ல் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x