

முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வர்சந்திரசேகர ராவ் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி(டிஆர்எஸ்) தலைவருமான சந்திரசேகர ராவ் 13-ம் தேதி திருச்சி வந்தார். குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வழிபட்ட அவர், நேற்று பிற்பகலில் சென்னை வந்தார்.
முதல்வர் ஸ்டாலினை சென்னைஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார். சமீபகாலமாக மத்திய பாஜக அரசுக்கு எதிரான நிலையை டிஆர்எஸ் கட்சிஎடுத்து வருகிறது. மத்திய அரசுக்குஎதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதோடு, நெல்கொள்முதல் செய்வதில் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக சமீபத்தில் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டினார்.
திமுக அரசும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேசிய அரசியல் நிலவரம், விரைவில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள், பாஜகவை வீழ்த்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ள முயற்சிகள், காங்கிரஸ் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.