Published : 29 Mar 2016 01:16 PM
Last Updated : 29 Mar 2016 01:16 PM
`வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
கோவில்பட்டியில் நேற்று மாலை அவர் கூறியதாவது, ‘தமிழகத்தில் 5 ஆண்டு காலமாகவே ஊழல் மிகுந்த ஆட்சி நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் வாக்குக்கு ரூ. 500 கொடுத்து அதிமுக வெற்றி பெற்றது.
அதுபோல், சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்கு ரூ. 1,000 கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஆங்காங்கே நம்பிக்கைக்குரிய இடங்களில் பணத்தை பதுக்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு ஒரு கண்டெய்னர் லாரி ஜெயலலிதா அடிக்கடி தங்கும் சிறுதாவூர் பங்களாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி வழி தெரியாமல் கிராமப்புறம் வழியாக சென்ற போது மக்கள் வழிமறித்து கேட்டுள்ளனர். அப்போது அதில் விறகு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று காலையில் 10 லாரிகள் சிறுதாவூர் பங்களாவுக்கு சென்றுள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாயை அந்த பங்களாவில் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும், அதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, மத்திய போலீஸார் கொண்டு சோதனை நடத்தி சிறுதாவூர் பங்களாவுக்கு சீல் வைக்க வேண்டும். வியாபாரிகள், பொதுமக்கள், வணிகர்களிடம் சோதனை நடத்தி பணத்தை பறிக்கும் தேர்தல் ஆணையம், சிறுதாவூர் பங்களாவையும் சோதனை நடத்தி சீல் வைக்க வேண்டும்.
தமிழகத்தில் வங்கிகளின் ஜப்தி நடவடிக்கையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் 5-ம் தேதி 78 விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியும் பங்கேற்கும்’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT