தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு; சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு; சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

Published on

மதுரை: தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு முறைகேட்டு வழக்கின் விசாரணையை சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

”தமிழகத்தில் 2019-ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 5,575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவு வெளியிட்டபோது முதல் நூறு இடங்களில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்புள்ளது. இதனால் சிபிஐ விசாரித்தால் மட்டுமே அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரமுடியும். எனவே சிபிசிஐடி வசம் உள்ள குரூப்-4 முறைகேட்டு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்”.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம், தேவராஜ் மகேஷ் ஆஜராகினர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

அதில், “குரூப்-4 முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. சிபிசிஐடி போலீஸார் வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ நேர்மையாகவும், விரைவாகவும் வழக்கை விசாரித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in