Published : 14 Dec 2021 01:14 PM
Last Updated : 14 Dec 2021 01:14 PM

சுங்குடி சேலைகளுக்கு ஜிஎஸ்டி வரியைக் கைவிடுங்கள்: நிர்மலா சீதாராமனிடம் நேரில் வலியுறுத்திய சு.வெங்கடேசன்

மதுரை: சுங்குடி சேலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி உத்தரவைக் கைவிடக்கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சு.வெங்கடேசன் எம்.பி. நேரில் வலியுறுத்தினார்.

தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் பெருமை சேர்க்கும் ஒன்றாக சுங்குடி சேலை உள்ளது. சுங்குடி சேலை மதுரையின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு புவிசார் குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சுங்குடி சேலைகளுக்கு ஜனவரி முதல் 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பல்லாயிரம் குடும்பங்கள் குடிசைத் தொழிலாக சுங்குடி புடவைகளை நெய்து வருகின்றனர். மேலும் அடித்தட்டு மக்கள் உடுத்தும் சுங்குடி சேலைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு மிகவும் சுமையேற்றும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு கடும் ஆட்சேபனை எழுந்துள்ளது.

சுங்குடி சேலைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கைவிடக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மதுரை சிபிஎம் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் எம்.பி. நேரில் வலியுறுத்திக் கூறியதாவது:

''சுங்குடி சாரீஸ் என்று அழைக்கப்படும் சுங்குடி புடவைகள் மதுரையின் அடையாளங்களில் ஒன்று. மொழிச் சிறுபான்மையினராக உள்ள சௌராஷ்டிரா சமூத்தைச் சார்ந்த மக்கள் இத்தொழிலில் பராம்பரியமாக ஈடுபட்டு வருகிறார்கள். கைகட்டு வடிவமைப்பு, மெழுகு பிரிண்ட் வடிவமைப்பு, ஸ்கீரின் பிரிண்ட் வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சலவை செய்தல் போன்ற பணிகள் இத்தொழிலில் உள்ளடக்கம். 10,000 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.

விவசாயக் கூலிப்பெண்கள், மீனவப் பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் அணியும் உடையான இச்சுங்குடி சேலைகள் தயாரிக்கும் தொழில் 1995-ல் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கபட்டுள்ளது. சிறப்பான, நேர்த்தியான இச்சேலைகளுக்கு “புவிசார் குறியீடும்” 2005-ல் வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.

இத்தகு பெருமை வாய்ந்த சுங்குடி சேலைகள் தயாரிக்கும் தொழில் மத்திய அரசின் வரி விதிப்புக் கொள்கையால் பாதிப்பிற்கு உள்ளாகவுள்ளது.

முற்றிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017-ம் ஆண்டு 5% வரி விதித்தது மத்திய அரசு. தற்பொழுது 12% ஆக உயர்த்தி ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகும் என்று ஆணை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. எளிய மக்களை பாதிக்கும் இவ்வரி உயர்வை உடனடியாகக் கைவிட வேண்டும்''.

இவ்வாறு எம் பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x