

கரோனா தடுப்பூசி போட்டதால் கணவர் உயிரிழந்ததாக கூறி, இழப்பீடு மற்றும் வேலை கேட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் அருகே பொய்கைஅரசூரைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி அழகம்மாள். இவர் நேற்று தனது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் பேச்சுவார்த்தைக்குப் பின் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அன்றைய தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனைக்குச் சென்ற போது வலி நிவாரணத்திற்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர். அதன் பிறகும், சரியாகாததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனையில் அனு மதித்தோம்.
பின்னர் அங்கிருந்து சென்னைராஜூவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தடுப்பூசி செலுத்தியதால் பக்கவிளைவு ஏற்பட்டுள் ளதாக (GBS - Guillain-Barre Syndrome) கூறி அதற்கான சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 20-ம் தேதி உயிரிழந்து விட்டார்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதன் விளைவால் எனது கணவர் உயிரிழந்துள்ளார். 2 பெண் பிள்ளைகளை வைத்து தவிக்கிறோம். எனது கணவர் கூலி வேலைக்குச் சென்று வந்து, எங்களை பராமரித்து வந்தார். தற்போது அவர் இல்லாததால் சிரமப்பட்டு வருகிறோம்.
எனவே, ஆட்சியர் நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.