Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM

வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் சேர்க்கும் விவகாரம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை

சென்னை வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவுநீரை சேர்ப்பதைத் தடுக்க பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ள உள்ள செயல் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் பகுதிகளில் புதிதாக உயரமான கட்டிடங்கள் கட்டப்படுவதால், ஏரிக்கு ஆபத்து ஏற்படும் என்றும், வேளச்சேரி ஏரி மற்றும் வீராங்கால் ஓடையில் கழிவுநீரை சேர்ப்பதால் ஏரி மாசுபடுவதாகவும் கடந்த ஆண்டு நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. அவற்றின் அடிப்படையில் இரு வழக்குகளை பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், வேளச்சேரி ஏரி, அதன் வரத்து கால்வாயில் உள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கூட்டுக் குழுவும் அமைக்க உத்தரவிட்டது.

மேலும், ஏரியை பராமரிக்கும் பொதுப்பணித் துறை, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய மாவட்ட ஆட்சியர், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டிய சென்னை குடிநீர் வாரியம் ஆகியவை மந்தமான அணுகுமுறையைக் கடைபிடிப்பதால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, வேளச்சேரி ஏரியை மாசுபடுவதைத் தடுப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்களை உருவாக்கி, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

அதில், சென்னை குடிநீர் வாரியம், வேளச்சேரி ஏரிக்கு வரும் கழிவுநீரை, வாய்ப்பிருந்தால் லாரிகள் மூலம் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லவும், புதை வடிகால் முறையிலும் கழிவுநீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

வேளச்சேரி ஏரி மாசுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை ஒருவரும் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த விவகாரத்தில் தலைமைச் செயலர் தலையிட்டு, வழக்கின் அடுத்த விசாரணை நாளான ஜன.7-ம் தேதிக்குள், இரு வழக்குகள் தொடர்பாக ஒருங்கிணைந்த விரிவான செயல் திட்டத்தை தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x