Published : 02 Mar 2016 09:22 AM
Last Updated : 02 Mar 2016 09:22 AM

போக்குவரத்து பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தம் வாபஸ்

போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் போக்கு வரத்து பணியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, நேற்று முதல் நடத்த இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப் பட்டது.

போக்குவரத்து துறையில் ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்புதல், பதவி உயர்வு அளித்தல், கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஈடுபடவுள்ள தாக போக்குவரத்து பணியாளர்கள் அறிவித்தனர். இதற் கிடையே, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளால் திடீரென அழைப்பு விடுக்கப்பட்டு, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

10 அம்ச கோரிக்கைகள்

இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மூத்த தலைவர் கு.பால்பாண்டியன், மாநில தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் கூறுகையில், ‘‘எங்களின் 10 அம்ச கோரிக்கைகள் குறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். சுமார் 2 மணிநேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறையில் தகுதியுள்ள பணியாளர்களுக்கு 2 நாட்களில் பதவி உயர்வு, கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்குவது, புதிய சோதனை சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுப்பது, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. இதனால், நாங்கள் நடத்த இருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x