தஞ்சையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி

தஞ்சையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி
Updated on
1 min read

தஞ்சாவூரில் நேற்று நள்ளிரவில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே நாட்டாணியைச் சேர்ந்தவர் பிரசாத் (41). இவர் காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். மாரியம்மன் கோவில் மருங்கையைச் சேர்ந்தவர் சுதாகர் (27), சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (32). இவர்கள் மூவரும் நண்பர்கள். நேற்று நள்ளிரவு 2 மணிக்கு பிரசாத், சுதாகர் ஆகியோர் காரிலும், பைக்கில் சந்திரசேகரும், தஞ்சாவூர் விக்கிரவாண்டி பைபாஸ் சாலை ஓரம் கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்டர் மீடியனில் 3 பேரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மீதும் மோதியது.

இந்த விபத்தில் பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார், மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லாரியைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 3 பேரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளைய பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (36). டாட்டா ஏசி டிரைவர். இவர் சுந்தர பெருமாள் அருகே வந்தபோது, கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற டூரிஸ்டர் வேன் டாட்டா ஏசி மீது மோதியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். டூரிஸ்டர் வேனில் வந்த கும்பகோணம் செம்போடையைச் சேர்ந்த மணிகண்டன் (40), காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். தப்பி ஓடிய டூரிஸ்ட் வேன் டிரைவரை சுவாமிமலை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in