Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

சென்னை

பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் வைப்பதற்கு நிதி ஒதுக்கி,அதற்கான் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

2021-22-ம்கல்வியாண்டில் மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக 37,391 அரசுப் பள்ளிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 7.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் பள்ளியின் வளாக சுகாதாரப் பணிகளுக்காக ரூ.1000 செலவிடப்பட்டது. மீதி தொகையை பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வைப்பதற்கு பயன்படுத்தி கொள்ள தற்போது அனுமதி தரப்படுகிறது. மேலும், அதற்கான வழிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி தற்போதைய சூழலில், மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குழுவின் சார்பில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும், ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய பயிற்சி பின்னர் வழங்கப்படும்.

‘மாணவர் மனசு’ பாதுகாப்பு பெட்டி

அதேபோல், பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ என்ற பெயரில் பாதுகாப்பு பெட்டி வைக்கப்பட வேண்டும். அந்த பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை திறந்து அதிலிருக்கும் புகார்களுக்கு உடனே தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கவேண்டும். இதுதொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x