Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

காதல் மணம் புரிந்த பெண்ணுக்கு மொட்டை அடித்து கொடுமை: பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்கு

திண்டிவனம் அருகே வெண்மணியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் யுவராஜ்(29). இவரும் அய்யந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த, 24 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். பெண்ணின் குடும்பத்தாரிடம் முறைப்படி யுவராஜ் பெண் கேட்டபோது, திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த 9-ம் தேதி சிங்கவரம் ரங்கநாதர் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது அங்கு வந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து யுவராஜ் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

புதுச்சேரியில் மீட்பு

இதற்கிடையே, புதுச்சேரியில் இருந்த உறவினர் வீட்டிலிருந்து சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை நேற்று காலை போலீஸார் மீட்டனர்.

அவர் அளித்திருக்கும் வாக்குமூலத்தில், "எனக்கு மொட்டை அடித்தனர். பின்னர் என்னை புதுச்சேரிக்கு கொண்டு சென்றனர். நான் அங்கிருந்து யுவராஜிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தேன். அதன் பின் போலீஸார் வந்து என்னை மீட்டனர்" என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பெண்ணின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x