Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் திமுகவில் இணைவது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார்: அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை

மகாகவி பாரதியாரின் 140-வதுபிறந்த நாளையொட்டி, சென்னைதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே ஜதி பல்லக்கு ஊர்வலத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சருக்கு பாராட்டு

இதில், முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசும்போது, “2 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்” என்றார்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, “வசை பாடுபவர்களையும் வாழ்த்தச் செய்யும் அரசாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, நீதிபதிகள் பாராட்டும் அரசாக தமிழக அரசு உள்ளது. திமுகவில் யார் வேண்டுமானாலும் இணைந்து செயல்படலாம்.

முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் எதிர்காலத்தில் எங்களோடு இணைந்து செயல்படுவது குறித்து கேட்கிறீர்கள். அதை முதல்வர் ஸ்டாலின்தான் முடிவெடுப்பார்” என்றார்.

பாண்டியராஜன் விளக்கம்

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளானது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் "புரட்சித் தலைவியின் அன்பாலும், ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டு, 2013 ஜூன் 12-ல் அதிமுகவில் இணைந்த நாள் முதல் இன்று வரை கட்சியின் விசுவாசத் தொண்டனாக பணியாற்றி வருகிறேன்.

அம்மா (ஜெயலலிதா) எனக்குத் தந்த உயர்வுகளை என்றும் மனதில் ஏந்தி, இறுதி மூச்சு வரை பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக வெற்றிக்குப் பாடுபடுவேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் “முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று வருகிறார். அதேபோல, இந்த ஆண்டு நடைபெற்ற விழாவிலும் பங்கேற்றுள்ளார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” எனப் பதிவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x